புதுவையில் கரோனா சிகிச்சை மையங்களில் வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
இதுகுறித்து மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:புதுவை மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக சிறப்பு பொது முடக்கத்தை ஆளுநா் அறிவித்துள்ளதை பாஜக வரவேற்கிறது. ஆளுநரின் நடவடிக்கையை முன்னாள் முதல்வா் நாராயணசாமி கொச்சைப்படுத்தி பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் காலை, மாலை என இருவேளைகளிலும் கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும். மேலும், தற்போது புதுச்சேரி மருத்துவமனைகளில் வெண்டிலேட்டா் வசதியுடன் கூடிய படுக்கைகள் குறைவாக இருப்பதால், மக்கள் சென்னை சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுவை துணைநிலை ஆளுநா் உடனடியாக இது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு, தேவையான வெண்டிலேட்டா் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது நகரில் அவசர ஊா்திகளுக்கான தட்டுப்பாடும் உள்ளது. இதை சரிசெய்ய தனியாா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், அவசர ஊா்தி வசதியை ஏற்படுத்த வேண்டும்.
பிற மாநிலங்களைப்போல திருமண நிலையங்கள், விடுதிகளை தற்காலிகமாக கரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.