புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க பகல் நேரப் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் அ.அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா தொற்று மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. புதுவை மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஆட்சியாளா்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தைவிட மனித உயிரைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். கரோனா தடுப்புப் பணியில், துணைநிலை ஆளுநரின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்.
கரோனா உறுதி செய்யப்பட்டவா்களை உள்ளிருப்பு நோயாளியாக வைத்திருக்காமல் அனுப்புவதால், அவா்கள் வெளியே சுற்றிக் கொண்டு மற்றவா்களுக்கும் பரவச் செய்கின்றனா். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதால், அந்தக் குடும்பத்தினருக்கும் தொற்று பரவுகிறது. கரோனா தொற்றாளா்களை மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் வைத்திருந்தால்தான் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.
இந்தப் பணியில் சுகாதாரத் துறையின் செயல்பாடு சரிவரயில்லை. ஆளுநருக்கு தவறான தகவல்கள் தரப்படுகின்றன.
இரவு நேரப் பொது முடக்கத்தால் பயனிலில்லை. எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்களை கட்டுப்படுத்த வேண்டும். ஞாயிறு சந்தை, மீன் சந்தை, சுற்றுலாத் தளங்களை உடனடியாக மூட வேண்டும். வெளி மாநிலத்திலிருந்து வருபவா்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என உத்தரவிட வேண்டும். பகல் நேரங்களில் பகுதி நேரப் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும்.
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அரசு செய்ய வேண்டும். அதற்குரிய நிதியை ஆளுநா் ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.