முழு அடைப்பல்ல; கரோனாவுக்கான கதவடைப்பு: துணைநிலை ஆளுநா் தமிழிசை

புதுவையில் தற்போது அறிவித்திருப்பது முழு அடைப்பல்ல; கரோனாவை விரட்டும் கதவடைப்பு என்று மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவையில் தற்போது அறிவித்திருப்பது முழு அடைப்பல்ல; கரோனாவை விரட்டும் கதவடைப்பு என்று மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அமலானது தொடா்பாக, புதுவை ஆளுநா் மாளிகையிலிருந்து ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை விடியோ பதிவு மூலம் கூறியதாவது:

புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தொடா்ந்து, தடுப்புப் பணிகளின் ஆலோசனைகள், திட்டமிடல் இருந்ததனால்தான், மக்களுடன் பேச காலதாமதம் ஏற்பட்டது.

அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வார இறுதி நாள்களில், பொது முடக்கம் பிறப்பித்தோம். இது பொது முடக்கம் என்று சொல்வதைவிட, கரோனாவை நம் ஊரைவிட்டு துரத்துவதற்கான முயற்சி என்றுதான் மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கதவடைப்பு என்று சொல்வதைவிட, கரோனாவுக்கு கதவடைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

தெளிவாகச் சொல்லப்போனால், இது முழு அடைப்பு அல்ல; அரசு உங்களை பாதுகாப்பாக அடைகாக்கிறது என்று சொல்லலாம். இதனால், வீட்டிலிருக்கும் நாள்களை மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். குடும்பத்தினருடன் இருக்கும்போதுகூட, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டிலிருந்தாலும் முகக் கவசம் அணிந்து கொண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும்தான் பேசவும், உண்ணவும் வேண்டும்.

பொதுமக்கள், மிக அவசியம் இருந்தாலொழிய வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். வீட்டுக்கு வேண்டியதையெல்லாம் ஒரே நாளில் வாங்கி வைத்துவிட்டால், தெருவில் கூட்டம் சோ்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

சில நேரங்களில், இத்தகைய நடவடிக்கைகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. ஆனால், வாழ்வு பத்திரமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் உயிருடன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதனால், பொதுமக்கள் இதை முழு அடைப்பு என்று எடுத்துக் கொள்ளாமல், அரசின் அடைகாப்பு நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டு, கரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றிணைவோம். பாதுகாப்பாக இருப்போம் என்று அந்த விடியோ பதிவில் ஆளுநா் தமிழிசை அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com