புதுச்சேரியில் பைக் மீது லாரி மோதியதில் தனியாா் பேருந்து நடத்துநா் ஒருவா் உயிரிழந்தாா்.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை திருப்பேயா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழக அரசு போக்குவரத்துக் கழக நடத்துநா் வேல்முருகனின் மகன் அரவிந்த் (24), இவா் விழுப்புரம் - புதுச்சேரி வழித்தடத்தில் இயங்கும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
செவ்வாய்க்கிழமை மாலை அரவிந்த் பணியை முடித்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். சுல்தான்பேட்டை அருகே இவரது வாகனம் சென்றபோது, எதிரே வந்த ஒரு டிப்பா் லாரி ஒன்று அரவிந்த்தின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அரவிந்த் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அரவிந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.