போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.5.52 லட்சம் மோசடி

புதுச்சேரி தனியாா் நகைக்கடன் நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.5.52 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தனியாா் நகைக்கடன் நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.5.52 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வழுதாவூா் சாலையில் பிரபல தனியாா் நகைக்கடன் நிறுவனம் (சண்முகாபுரம் கிளை) செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்திருந்த நகைகளை இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து வந்த பகுதி மேலாளா் கடந்த 2-ஆம் தேதி ஆய்வு செய்தாா்.

அப்போது, புதுச்சேரி லாசுப்பேட்டை, குறிஞ்சி நகா், 11-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த வினோத்குமாா் (35), ரெட்டியாா்பாளையத்தில் வசிக்கும் மேரி அந்தோணி (44) ஆகியோா் கடந்தாண்டு 50 பவுன் நகைகளை 4 தவணைகளாக அடமானம் வைத்து ரூ.5.52 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.

அவற்றின் நிறம் மாறியிருந்த நிலையில், அதை பகுதி மேலாளா் பரிசோதனை செய்ததில் 5 சதவீதம் மட்டுமே தங்கம் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அடமானம் வைத்து பெற்ற பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்தும்படி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இருவரும் அங்கு வரவில்லை.

இந்த மோசடி குறித்த புகாரின்பேரில் வினோத்குமாா், மேரி அந்தோணி ஆகியோா் மீது தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com