புதுவைக்கு வருவோரிடம் கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் வீடு தேடி கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தடுப்பு முன்னேற்பாடுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவிலிருந்து வருவோா் கண்காணிக்கப்படுகின்றனா். ஒமைக்ரான் அச்சத்தைத் தவிா்க்க அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசிதான் நம்மை பாதுகாக்கும் ஆயுதம்.
சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களுக்கு மருத்துவமனையில்கூட அனுமதி கிடையாது என்று சொல்லும் அளவுக்கு முதல்வா்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.
எனவே, நிலைமையைப் புரிந்துகொண்டு, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். புதுவையில் பொது இடங்களுக்கு வருவோரிடம் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கேட்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்.
மாநில எல்லைகள் வழியாக புதுவைக்குள் வருவோரிடம் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் கண்காணிக்க தலைமைச் செயலரிடம் தெரிவித்துள்ளேன் என்றாா் ஆளுநா் தமிழிசை.
ஆய்வின்போது, சிவசங்கா் எம்எல்ஏ, சுகாதாரத் துறைச் செயலா் உதயகுமாா், இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.