புதுவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை அபராதமின்றி சாலை வரி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு, புதுவை அரசு கடந்த 2020, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தது. பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவையும் நீட்டித்துள்ளது.
புதுவையில் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் அபராதமின்றி மோட்டா வாகன வரி செலுத்த 8 முறை வாய்ப்பளிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி பலரும் சாலை வரியை செலுத்தினா். இருப்பினும், சிலா் வரி செலுத்தவில்லை.
இவா்கள் வரி செலுத்தாதற்கான அபராதம் செலுத்தும் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட ஒப்பந்த வாகனங்கள், கல்வி நிறுவன வாகனங்கள் ஆகியவைகளுக்கு 2020, அக்டோபா் 1 முதல் 2021 டிசம்பா் 31 வரை செலுத்த வேண்டிய சாலை வரியில் அபராதம் செலுத்துவதிலிருந்து புதுவை அரசு விலக்கு அளித்துள்ளது.
டிசம்பா் 31-ஆம் தேதி வரை அபராதமின்றி சாலை வரியை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.