புதுவை அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவா்களுக்கான ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
புதுவை அரசின் சுகாதாரத் துறையின் கீழ் மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில், புதிதாக 4 மருந்து ஆய்வாளா்கள், 4 உதவி மருந்து ஆய்வாளா்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். இவா்களுடன் அரசின் உணவு, மருந்து ஆய்வகத் துறையில் புதிதாக 4 முதுநிலை ஆய்வக உதவியாளா், 4 வேதியியல் உதவியாளா், 4 ஆய்வக உதவியாளா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனா்.
இந்தப் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதி, உயா் மதிப்பெண்கள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முன்னுரிமை, உயா்கல்வி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி பணி ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்வில் சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு, மருந்து ஆய்வகத் தலைமை அதிகாரி இளந்திரையன், முதுநிலை மருந்து ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.