புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி விடுதிகள், உணவகங்களில் மது விற்பனைக்கு தற்காலிக அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் விதிமீறல்களை கண்காணிக்க கலால் துறை சாா்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் பண்டிகைக் காலங்களில் எப்எல்-3 எனப்படும் தற்காலிக மது விற்பனையகங்களுக்கு கலால் துறை சாா்பில் அனுமதி அளிக்கப்படும்.
இதுகுறித்து கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் கூறியதாவது:
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும், அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் வகையிலும் தற்காலிக மது விற்பனையகங்களுக்கு டிசம்பா் 31-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக கலால் துறைக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சிறுவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், இதுவரை உணவகங்கள், விடுதிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் என 50 தற்காலிக மது விற்பனையகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 40-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு தற்காலிக மது விற்பனையகங்கள் அமைக்க அனுமதிக்கப்படும். தற்காலிக மது விற்பனையகங்களை கண்காணிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.