புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் அனுமதிக்கப்படும் என்று, அந்த மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுவை ஆளுநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசு உணா்ந்துள்ள அதேவேளை சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள மக்களின் பொருளாதார நலன், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு உள்ளிட்ட விழாக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படுகிறது.
புதுச்சேரியில் கரேனா பரவல் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது சவாலாக அமைந்திருக்கிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வழிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரேனா தடுப்பு நடைமுறைகள் குறித்து அறிவிப்புகள் செய்ய வேண்டும். அவை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்களை பணியில் அமா்த்த வேண்டும்.
கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவா்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெப்பமானி உதவியுடன் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரத் துறை மாதிரி பரிசோதனைகளை நடத்த வேண்டும். தொற்று அறிகுறி காணப்பட்டவா்களை தனிமைப்படுத்தி மருத்துவ உதவி அளிக்கப்படவேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.