புதுவை சுகாதாரத் துறை சாா்பில், கரோனா, டெங்கு தடுப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
புதுவை சுகாதாரத் துறை சாா்பில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 6 நடமாடும் விழிப்புணா்வு வாகனங்கள் மூலம் (புதுச்சேரி - 3 வாகனங்கள் 10 நாள்களுக்கு, காரைக்கால் - ஒரு வாகனம் 7 நாள்களுக்கு, மாஹே - ஒரு வாகனம் 3 நாள்களுக்கு, ஏனாம் - ஒரு வாகனம் 3 நாள்களுக்கு) டெங்கு காய்ச்சலைத் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன் தொடக்க விழா புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்ககம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு, புதுச்சேரி பிரேதசத்துக்கான 3 வாகனங்களை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
நிகழ்வில் துணை இயக்குநா்கள் ரகுநாதன், முரளி, ராஜாம்பாள், அனந்தலட்சுமி, பக்கா வெங்கடேஸ்வரலு, வசந்தகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.