தமிழகம், புதுவையில் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீர் மழை பெய்ய தொடங்கி, பெய்து வருகிறது.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரம் பரவலாக பெய்து வருகிறது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பாடு செய்துள்ள கட்டமைப்புகள், இந்த மழையால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுற்றுலாவுக்கு வந்துள்ள பயணிகள், பொதுமக்கள் திடீர் மழையால் அவதி அடைந்தனர். தொடர்ந்து இரு தினங்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.