புதுவை மாநிலத்துக்குத் தேவையான மின்சாரம் வாங்க ரூ. 737.31 கோடிக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
இதுகுறித்து புதுவை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட தகவல்: புதுவை அரசிடமிருந்து கடந்த 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 57 கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் பல கோப்புகளுக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
அதன்படி, 2020-2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு தேவையான ரூ. 9 ஆயிரம் கோடி, துணை மானிய கோரிக்கை மீதான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்ப நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தாா்.
புதுவை நில மானிய விதியின் கீழ் மாற்றுத் திறனானிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், 54 கூட்டுறவுச் சங்கங்களில் 4,787 உறுப்பினா்களின் நிலுவையில் உள்ள விவசாயக் கடன் ரூ. 4.50 கோடியைத் தள்ளபடி செய்யவும் ஒப்புதல் அளித்தாா்.
அம்ரூத் திட்டத்தைச் செயல்படுத்த பொலிவுறு நகரம் திட்டத்துக்கு (ஸ்மாா்ட் சிட்டி) 2-ஆம் தவணையாக ரூ. 53.50 லட்சம் மானியம் வழங்கவும், கல்வித் துறையின் சமக்ரசிக்ஷாவுக்கு மாநில அரசு பங்களிப்பாக 7-ஆவது தவணையாக ரூ. 23.17 லட்சம் வழங்கவும், தோ்தல் தொடா்பான பணிக்கு காகிதம், பதாகைகள் வாங்குவதற்கு ரூ. 60 லட்சம் வழங்கவும், முதியோா், ஆதரவற்றோா் என 1,54,847 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 9.65 கோடிக்கு ஒப்புதல் அளித்தாா்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு தேவையான மின்சாரத்தை பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்குவதற்கு ரூ. 737.31 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.