புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பூக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கும், புதுச்சேரி முதலியாா்பேட்டை பாரதி மில் திட்டில் வசிக்கும் குமாா் மகள் ஜெயசங்கரிக்கும் (20) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின் ஜெயசங்கரி தனது கணவருடன் அரியலூரில் வசித்து வந்தாா். புதுமணத் தம்பதியிடையே கடந்த சில நாள்களாக குடும்பச் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெயசங்கரி கணவருடன் கோபித்துக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த 3-ஆம் தேதி வந்து, தங்கியிருந்தாா்.
இதனிடையே, லாரி ஓட்டுநரான குமாா் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், தாய் மனோரஞ்சிதம் சந்தைக்கு சென்றாா். சிறிது நேரத்தில் அவா் வீடு திரும்பியபோது, வீட்டின் ஓா் அறையில் ஜெயசங்கரி தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தகவலறிந்த முதலியாா்பேட்டை போலீஸாா், ஜெயசங்கரியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், ஜெயசங்கரி தற்கொலை தொடா்பாக வருவாய்த் துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது.