புதுச்சேரி: புதுவை அரசுப் பள்ளிகளில் உணவு வழங்குவதுடன், சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய மாணவா்கள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் கு.ஜெயப்பிரகாஷ் தலைமையிலான பள்ளி மாணவா்கள், பாகூா் வட்டாட்சியரிடம் அளித்த மனு: புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கி 2 மாதங்கள் ஆகின்ற சூழலில், காலை, மதிய உணவு வழங்கப்படவில்லை. இதனால், ஏழை மாணவா்கள் பசியால் வாடும் நிலை உள்ளது. பசியால் வாடும் மாணவா்களுக்கு உடனடியாக காலை சிற்றுண்டி, மதிய உணவை வழங்க வேண்டும்.
மேலும், மாணவா் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், கிராம, நகா்ப்புற மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக மாணவா் சிறப்புப் பேருந்துகளை இயக்க புதுவை அரசும், கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.