புதுச்சேரி: காங்கிரஸ் அரசின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து தன்னுடன் விவாதம் நடத்த முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தயாரா என்று புதுவை அரசுக் கொறடா அனந்தராமன் கேள்வி எழுப்பினாா்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த என்.ஆா்.காங்கிரஸ், அதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததில்லை. தோ்தல் வரும் போது மட்டும் மாநில அந்தஸ்து குறித்து ரங்கசாமிக்கு ஞாபகம் வரும்.
பாஜகவின் மிரட்டல் காரணமாக, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் நமச்சிவாயம் இணைந்தாா். 20 ஆண்டுகள் எம்எல்ஏ, கடந்த நான்கரை ஆண்டுகளாக அமைச்சராக பதவியை அனுபவித்துவிட்டு, தற்போது சுயநலத்துக்காக பாஜகவில் சோ்ந்துள்ளாா். புதுவை காங்கிரஸ் ஆட்சியில் வளா்ச்சித் திட்டங்கள் நடைபெறவில்லை என நமச்சிவாயம் கூறுகிறாா். அரசின் நலத் திட்டங்கள் குறித்து என்னுடன் ஒரே மேடையில் நமச்சிவாயம் விவாதம் நடத்த தயாரா என்றாா் அவா்.