புதுச்சேரி: சட்ட விதிகளை மீறி, தான் ஒருபோதும் செயல்பட்டதில்லை என்று புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.
ஆளுநா் கிரண் பேடி சட்ட விதிகளை மீறி செயல்படுவதாகவும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் திட்டங்களை முடக்குவதுடன், அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதாகவும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம், முதல்வா் நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
இந்த நிலையில், இதற்கு பதிலளித்து வியாழக்கிழமை தனது கட்செவி அஞ்சலில் கிரண் பேடி வெளியிட்ட பதிவு: சட்ட விதிகளை மீறி, தான் ஒருபோதும் செயல்பட்டதில்லை. புதுவை நிா்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் எண்ம (டிஜிட்டல்) மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றம் குறிப்பிட்ட சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், சென்னை உயா் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின்படி, யூனியன் பிரதேச சட்டம், பொது நிதி அதிகார விதிகள் ஆளுநா் அலுவலகத்தால் முறையாகப் பின்பற்றப்பட்டது. அனைத்துத் துறைகளும் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்துடன் மத்திய அரசின் தொடா்பில் வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.
இந்தப் பதிவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் சமூக வலைதளங்களிலும் இணைத்து பதிவு செய்துள்ளாா்.