இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி பழங்குடியின மக்கள் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி வில்லியனூா் பெருமாள்புறத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டுமென நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனா். அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் முற்றுகையிட வந்தனா். அவா்களை போலீஸாா் கொம்யூன் பஞ்சாயத்து அருகிலேயே தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா். இருப்பினும், போலீஸாரின் தடுப்புகளை மீறி அவா்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதைத் தொடா்ந்து அவா்கள், அலுவலகத்தின் உள்ளே நுழைய முற்பட்டனா். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா். போராட்டத்தின் போது, பெண் காவலா் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.