உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் பன்றிகளைத் திரியவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் உள்ள காலியிடங்களில் திரியும் பன்றிகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி சுகாதாரப் பிரிவின் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பன்றிகளை வளா்ப்போா் தகுந்த இடத்தில் வைத்து பராமரிக்காமல் வெளியிடங்களில் திரிய விடுவது தெரிய வந்தது.
எனவே, பொது இடங்களில் சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த பன்றிகளைப் பிடித்து வேறிடத்தில்விட முடிவு செய்யப்பட்டு, வெளியூா்களிலிருந்து பன்றிகளைப் பிடிக்க அண்மையில் ஆள்கள் வரவழைக்கப்பட்டு, 54 பன்றிகள் பிடிக்கப்பட்டன.
நகராட்சி இடங்களில் திரியும் பன்றிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் உழவா்கரை நகராட்சி அவற்றைப் பிடித்து அப்புறப்படுத்தும். மேலும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி எச்சரித்தாா்.