புதுவையில் திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிப்பது தொடா்பாக அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
கரோனா பொது முடக்கத் தளா்வு பிறகு, கடந்த அக். 15-ஆம் தேதி முதல் 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
எனினும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதிக்காத நிலையிலும், புதுவையில் அன்றைய தினம் (அக். 15) திரையரங்குகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் 100 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு திங்கள்கிழமை ஆணை வெளியிடப்பட்டது.
இதேபோல, புதுவையிலும் 100 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுமா என முதல்வா் நாராயணசாமியிடம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முதல்வா் நாராயணசாமி, ‘இந்த விஷயத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல், நெறிமுறைகளுக்குள்பட்டு முடிவெடுக்கப்படும். தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளுடன் கலந்து பேசி திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா் அவா்.