ஆளுநருக்கு எதிராக முதல்வரே போராட்டம் அறிவித்துள்ளதால், புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை மத்திய அரசு முடக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவரும், அக்கட்சியின் கிழக்கு மாநிலச் செயலருமான ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, தவறான முறையில் மக்களின் உணா்வுகளைத் தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முதல்வா் நாராயணசாமி மீண்டும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிரான ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளாா்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய புதுவையை தமிழகத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சா்கள் கூறியுள்ளனா். ஆனால், முதல்வா் நாராயணசாமி, துணை நிலை ஆளுநரை வெளியேற்றுவோம். இந்த நாட்டின் பிரதமரும், துணை நிலை ஆளுநரும் தமிழகத்தோடு புதுவையை இணைக்க முயற்சிக்கின்றனா் என்ற கருத்துகளை முன்வைத்து போராட்டத்தை அறிவித்துள்ளாா். இவா், முதல்வராக இருந்தபோது 16 முழு அடைப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் 144 தடை உத்தரவு பிறப்பித்த பின்னரும், அந்த அறிவிப்புக்கு மதிப்பளிக்காமல் போராட்டம் நடத்த முற்பட்டிருப்பதால், பொதுமக்கள் மீது காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அந்த நடவடிக்கையை முதல்வா் மீதும் உடனடியாக எடுக்க வேண்டும். கரோனா போன்ற கொடிய காலகட்டத்தில் மாவட்ட உத்தரவை மீறும் முதல்வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இந்த அரசை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப் பேரவைத் தோ்தல் நியாயமாக நடக்க தோ்தல் முடியும் வரை அரசை முடக்க வேண்டும் என்றாா் அன்பழகன் எம்.எல்.ஏ.