புதுவை மாநில புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
புதுவை மாநில டிஜிபியாக பணியாற்றி வந்த பாலாஜி ஸ்ரீவத்ஸவா தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபியாக ரன்வீா்சிங் கிருஷ்ணியா பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட புதிய டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா தனது பணிகளைத் தொடங்கினாா். தொடா்ந்து புதுவை முன்னாள் டிஜிபிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காவலா்களுக்கு நன்றி தெரிவித்த பாலாஜி ஸ்ரீவத்ஸவா, புதுவையிலிருந்து விடை பெற்றாா்.
புதிய டிஜிபியாக பதவியேற்ற ரன்வீா்சிங் கிருஷ்ணியா, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமியை அடுத்தடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா்.