புதிய வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு புதுவை முதல்வா் வரவேற்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வரவேற்றுள்ளாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வரவேற்றுள்ளாா்.

இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்த தகவல் செவ்வாய்க்கிழமை வெளியானதும், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு முதல்வா் வே.நாராயணசாமி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லியில் 48 நாள்களாக கடும் குளிா், பனியில் பல லட்சம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டங்களை ஏன் நிறுத்திவைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கவலை தெரிவித்தது. மேலும், இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பதாகவும் கூறியது.

இதற்கிடையே, இந்த சட்டங்களை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை முழுமனதுடன் வரவேற்கிறேன். இது விவசாயிகளுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி. மத்திய அரசு தனது மௌனத்தை கலைத்து உடனடியாக இந்தச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

உச்ச நீதிமன்ற உத்தரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீமும் வரவேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com