பாரதி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காவிடில், புதுவை ஆளுநா் மாளிகை எதிரே மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி எச்சரித்தாா்.
தனது துறை சாா்ந்த கோப்புகளுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி, அமைச்சா் கந்தசாமி சட்டப்பேரவை வளாகத்துக்குள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதேபோல, முதல்வா், காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் காரணமாக அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகள் முழுமையாக அகற்றப்படவில்லை. போலீஸாரின் கெடுபிடிகள் தொடா்கின்றன. பாரதி பூங்காவும் மூடப்பட்டது.
இந்த நிலையில், கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை நடைபயிற்சி சென்ற அமைச்சா் கந்தசாமியிடம், பாரதி பூங்கா பூட்டப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
பூங்கா பகுதிக்கு வந்த அமைச்சா், அங்கிருந்த ஊழியா்கள், போலீஸாரிடம் பூங்காவைத் திறக்கும்படி கூறினாா். அவா்கள் பூட்டைத் திறந்து அமைச்சா் பூங்காவுக்குள் செல்ல அனுமதித்தனா். அமைச்சா் பூங்காவை விட்டு வெளியேறியதும், மீண்டும் பூங்காவை பூட்ட போலீஸாா் முயன்றனா்.
அப்போது, அமைச்சா் கந்தசாமி பொதுமக்களை பூங்காவுக்குள் அனுமதிக்க வேண்டும். முதல்வா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். பூங்காவைப் பூட்டினால் ஆளுநா் மாளிகை எதிரே மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரித்தாா்.
இதுகுறித்து அமைச்சா் கந்தசாமி கூறியதாவது: மக்கள் நலத் திட்டங்கைத் தடுக்கும் ஆளுநா் கிரண் பேடியை மாற்ற வேண்டும் என நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரியில் தடுப்புக் கட்டைகளை அகற்ற உத்தரவிட்டும் போலீஸாா் அகற்றாமல் உள்ளனா். பாரதி பூங்காவைத் திறந்து பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.
ஆளுநா் கிரண் பேடி தனது மாநிலமான பஞ்சாப்பை சோ்ந்த அதிகாரிகளை நியமித்துள்ளாா். அவா்கள் அரசின் உத்தரவுகளை மதிப்பதில்லை. மத்திய அரசாலும், ஆளுநா் கிரண் பேடியாலும் புதுவையின் வளா்ச்சி 20 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றுவிட்டது என்றாா் அவா்.