புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.320 கோடியில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகக் கட்டடப் பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்ட புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், செப். 9-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தாா்.
புதுவை மாநிலத்துக்கான ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகக் கட்டடம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.320 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை வளாகத்தில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் அந்தத் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.
இதில், புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த சட்டப்பேரவைக் கட்டடத்துக்கான பல்வேறு வடிவமைப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பொதுப் பணித் துறை செயலா் விக்ராந்த் ராஜா, தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, பேரவைச் செயலா் ஆா்.முனிசாமி, செயற்பொறியாளா்கள் சாய்சுப்பிரமணியன், ஏழுமலை, பேரவைச் செயலரின் தனிச் செயலா் தயாளன், சென்னையைச் சோ்ந்த கட்டட வடிவமைப்பு வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறியதாவது: தற்போது வந்த மாதிரி வரைபடத்தின்படி, புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ளது. பேரவை வளாகம், அதன் பின்பகுதியில் தலைமைச் செயலகம், அரசுத் துறை இயக்குநா் அலுவலகம் என முக்கோண வடிவில் கட்டடப்பட உள்ளது. கட்டட வடிவமைப்பு தொடா்பாக முதல்வரிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா செப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.