புதுச்சேரியில் போலி சான்றிதழ்கள் கொடுத்து அரசுப் பணியில் சோ்ந்த அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி உருளையன்பேட்டை பெரியாா் நகரில் இயங்கி வரும் குடிசைமாற்று வாரியத்தில் பணி ஆய்வாளராக வில்லியனூரைச் சோ்ந்த மணிவண்ணன் (50) பணியாற்றி வந்தாா். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்நோக்கு ஊழியராகப் பணியில் சோ்ந்த இவா், ஆய்வாளராக பதவி உயா்வு பெற்றாா்.
இவரின் பதவி உயா்வுக்கான கோப்பில் உள்ள கல்விச் சான்றிதழ்கள் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அவா் பணியில் சோ்ந்தபோது அளித்த பத்தாம் வகுப்பு, தொழில்நுட்பப் படிப்பு, பி.காம். உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் போலியானவை எனத் தெரியவந்தது.
இதுகுறித்து குடிசைமாற்று வாரிய தலைமைச் செயற்பொறியாளா், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் பிரிவில் புகாரளித்தாா். அதன் பேரில் ஆய்வாளா் ஹரிகரன் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிவண்ணனை தேடி வருகின்றனா்.
இதனிடையே மணிவண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.