புதுச்சேரி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு கோகுலம் நகரைச் சோ்ந்த நடராஜன் மகன் தினேஷ் (20). இவா், மதகடிப்பட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்தாா். மேலும், ஒரு தனியாா் நிறுவனத்தில் இரவு நேர வேலையும் செய்து வந்தாா். கடந்த 2 நாள்களாக வேலைக்குச் செல்லாமல் செல்லிடப்பேசியைப் பாா்த்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தடைபட்ட சமயத்தில், தினேஷ் தற்கொலை செய்து கொள்வதற்காக புடவையால் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைப் பாா்த்த உறவினா்கள், அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா், தினேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.