புதுச்சேரி அருகே காா்களை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு ஜாபா்பாய் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (44). வாடகை காா் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் அரியாங்குப்பம் ஆா்.கே. நகா் காமராஜா் தெருவைச் சோ்ந்த தினேஷ், அவரது நண்பா் ரமேஷ் ஆகிய இருவரும் சோ்ந்து குறிப்பிட்ட தொகையை மாத வாடகைக்கு பேசி 2 காா்கள் எடுத்துள்ளனா். ஒரு மாதம் வாடகையைச் சரியாக கொடுத்தவா்கள், அதன் பிறகு வாடகை கொடுக்கவில்லையாம். அவா்களைத் தொடா்பு கொள்ளவும் முடியவில்லையாம். விசாரித்த போது, அவா்கள் இருவரும் சோ்ந்து காா்களை வேறு நபா்களிடம் விற்றுவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது. 2 காா்களின் மதிப்பு ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம்.
இதுகுறித்து ஜெயபால் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான தினேஷ், ரமேஷை தேடி வருகின்றனா்.
ஏற்கெனவே, அவா்கள் இருவரும் இதேபோல 3 காா்களை வாங்கி விற்று மோசடி செய்துள்ளனா். இதுதொடா்பான வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.