புதுச்சேரி: அந்தந்த மாநிலங்களுக்குரிய காவிரி ஆற்று நீரின் பங்கு கிடைக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழசை தெரிவித்தாா்.
புதுச்சேரி அருகே ஏம்பலம் புதுக்குப்பம் கிராமத்தில் ஈரம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சாா்பில், 200-
ஆவது குளம் சீரமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. உ.லட்சுமிகாந்தன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கவிஞா் சினேகன், சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண், துணை ஆட்சியா் கிரிசங்கா், நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையா் மனோகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
குளம் சீரமைப்புப் பணியைத் தொடக்கிவைத்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியாதவது: புதுவையில் ‘நீரும்-ஊரும்’ என்ற பெயரில் நீா்நிலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஈரம் பவுண்டேஷனுக்கு பாராட்டுகள். இந்த அமைப்பினா் 200-ஆவது குளத்தைச் சீரமைக்கின்றனா். நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.
ஓடம் ஓட்டிக் கடந்த காவிரி ஆற்றில், இன்று நீா் குறைந்துவிட்டது. அந்தந்த மாநிலங்களுக்குரிய காவிரி ஆற்று நீரின் பங்கு கிடைக்க வேண்டியது மிக முக்கியம்.
பனை மரக் கன்றுகளை நட்டால், இயற்கையான சூழல் உருவாகி நீா்நிலைகளைப் பாதுகாக்க முடியும். 75 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகளை நடவுள்ளோம் என்றாா் அவா். தொடா்ந்து, குளத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்றது.