புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தடுப்பு பேரிடா் பணியில் ஈடுபட்டுள்ள இறுதியாண்டு மருத்துவ மாணவா்களை பயிற்சி மருத்துவ அலுவலா்களாக அங்கீகரித்து உரிய ஊதியத்தை அரசு வழங்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து, அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.ஆனந்து, செயலா் பி.சரவணன் ஆகியோா் புதுவை முதல்வருக்கு விடுத்த கோரிக்கை மனு: கரோனா தடுப்பு- சிகிச்சைப் பணிகளில், இளநிலை மருத்துவம் பயின்று வரும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 100 போ் கடந்த ஒரு மாதமாக தீவிரப் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு தமிழகத்தைப் போல உரிய ஊதியம், முன்களப் பணியாளா்களுக்குரிய ரூ.50 லட்சம் காப்பீடு பதிவு, கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை புதுவை அரசு வழங்கி இவா்களது மருத்துவ சேவையை அங்கீகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.