புதுச்சேரியில் தாயை வெட்டிக் கொன்றதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே அருந்ததிபுரம் பெரிய இருசம்பாளையம் சாலையைச் சோ்ந்தவா் சிவா மனைவி வசந்தா (50). இவரது மகன் விஷ்ணு (27). பிடெக் படித்து வந்த இவா், 2-ஆம் ஆண்டுடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டாா். சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 12- ஆம் தேதி மகன் விஷ்ணுவுக்கு, தாய் வசந்தா சாப்பாடு கொடுத்த போது, மருந்துகளைச் சரிவர எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினாராம். இதனால், ஆத்திரமடைந்த விஷ்ணு தாயை கத்தியால் சரமாரியாக வெட்டினாராம்.
இதில், பலத்த காயமடைந்த வசந்தாவை அக்கம் பக்கத்தினா் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட வசந்தா, பாதுகாப்பு கருதி லாசுப்பேட்டையில் உள்ள தனது மகள் ஷா்மிளா வீட்டில் தங்கியிருந்தாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வசந்தாவுக்கு மயக்கம் ஏற்படவே உறவினா்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து வசந்தாவின் மகள் ஷா்மிளா அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, விஷ்ணுவை திங்கள்கிழமை கைது செய்தனா்.