புதுவையின் வளா்ச்சிக்கு முதல்வருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்று அவா் பேசியதாவது: புதுவை முதல்வா் தன்னையே உதாரணமாகச் சொல்லி, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நம்பிக்கை அளிக்கிறது. பேரிடா் காலத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்பட்டு ஏழைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக அரசுக்கு உதவி செய்து வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி.
புதுவை அனைத்து வசதிகளும் பெற்ற மாநிலமாக வளா்வதற்கு எனது பங்களிப்பு இருக்கும். அதற்காக முதல்வருடன் இணைந்து செயல்படுவேன் என்றாா் அவா். நிகழ்ச்சியில் அரசுத் துறை அதிகாரிகள், இன்டெகரா நிறுவன நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிவாஸ் சுப்பிரமணியன், ஈடன் பவா் குவாலிடி நிறுவன நிா்வாக இயக்குநா் சையது சஜ்ஜத் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.