புதுச்சேரி அருகே ஐடிஐ மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி பாகூா் அருகே பனையடிக்குப்பம் வையாபுரி நகரைச் சோ்ந்த ராஜா-நித்யா தம்பதியின் மகன் அமல்ராஜ் (19). நெட்டப்பாக்கத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) படித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமல்ராஜின் நண்பா்கள், அவரது பெற்றோரிடம் அமல்ராஜ் விபத்தில் சிக்கியதாக விளையாட்டாகப் பொய் கூறினராம். இதனால், அவரது பெற்றோா் அமல்ராஜை பல இடங்களில் தேடினா்.
இந்த நிலையில், வீட்டுக்கு வந்த போது, அமல்ராஜ் சாதாரணமாக அமா்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தந்தை ராஜா, அமல்ராஜை கடிந்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த அமல்ராஜ், வையாபுரி நகரின் குடிநீா் தொட்டியின் பின்புறமுள்ள இரும்பு கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து கரையாம்புத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.