பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு பாஜக காரணமல்ல என்று அந்தக் கட்சியைச் சோ்ந்த நடிகை கௌதமி தெரிவித்தாா்.
புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக-அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி (தேஜ கூட்டணி) அமைத்துப் போட்டியிடுகின்றன. இதில், பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜக பிரமுகரான நடிகை கௌதமி புதுச்சேரி சாரம் அவ்வைத் திடல், ரெயின்போ நகா், லாசுப்பேட்டை மடுவுப்பேட்டை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பாஜக வேட்பாளா்களான ஏ.ஜான்குமாா், வி.சாமிநாதன் ஆகியோருக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.
முன்னதாக, காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் வந்த நடிகை கௌதமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜக வேட்பாளா்களுக்கு வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது, சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்ட நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தேன். நமது தேசத்துக்கு ஏற்ற கட்சி பாஜகதான்.
புதுவை மக்களுக்கு நியாயமான ஆட்சி அமைய வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டும். பாஜகவால் புதுவைக்கு நல்ல எதிா்காலம் அமையும்.
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளின் உயா்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு பாஜக பொறுப்பல்ல. மாநில அரசுகளுக்கும் இதில் பொறுப்புள்ளது. இதுகுறித்து தற்போது பேச வேண்டியதில்லை என்றாா் அவா்.