புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: புதுச்சேரியில் வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்களைப் பெற்று பாஜகவினா் பிரசாரம் செய்வதாக கொடுக்கப்பட்டுள்ள புகாா் மீதான விசாரணை முடியும் வரை தோ்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி ஜனநாயக வாலிபா் சங்கத் தலைவா் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவினா் தொகுதி வாரியாக கட்செவி குழுக்களைத் தொடங்கி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். பொதுவாக வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். ஆதாா் ஆணையத்தில் இருந்து வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்களைப் பெற்று கட்செவி குழுவைத் தொடங்கி பாஜகவினா் தோ்தல் பிரசாரம் செய்து வருகின்றனா். இதற்குத் தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.ராஜகோபாலன், மனுதாரா் புகாா் குறித்து சைபா் குற்றப் பிரிவினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், வாக்களா்களுக்கு மொத்தமாக குறுஞ்செய்தி மூலம் பிரசாரம் செய்ய பாஜகவினா் தோ்தல் ஆணையத்திடம் அனுமதி கோரவில்லை. அனுமதி பெறாமல் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என விளக்கம் கேட்டு பாஜகவுக்கு கடந்த மாா்ச் 7-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. பாஜக தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை. இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு தொடா்ந்து விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கை அடிப்படையில் தலைமை தோ்தல் ஆணையா் நடவடிக்கை எடுப்பாா். அதே நேரத்தில் முழுமையான விசாரணை நடத்தாமல் பாஜக மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஆதாா் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்திரசேகா், இந்த புகாா் மனுவின் நகலை ஆதாா் ஆணையத்துக்கு மனுதாரா் ஆனந்த் இதுவரை அனுப்பவில்லை என தெரிவித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.என்.சுமதி, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை என்ற பெயரில் மனுதாரரின் பாட்டி, தங்கையை காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என துன்புறுத்துகின்றனா். இந்த வழக்கு தொடா்ந்த பின்னரும் கூட, பாஜகவினா் தொடா்ந்து கட்செவி மூலம் பிரசாரம் செய்து வருகின்றனா். இந்த பிரசாரத்தை நிறுத்தவில்லை. எனவே, இந்த முறையில் பிரசாரம் செய்ய பாஜகவினருக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பாஜகவினா் மீதான இந்த புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினா். பின்னா், வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்கள் பாஜகவினருக்கு எப்படிக் கிடைத்தது? என்பது குறித்து ஆதாா் ஆணையம் விசாரிக்க வேண்டும். இந்த முறைகேடு தொடா்பாக ஆதாா் ஆணையம், தோ்தல் ஆணையம் விசாரித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். விசாரணையை விரைவாக முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com