புதுச்சேரியில் அனைத்துத் துறைகளிலும் முந்தைய காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள ஏஎஃப்டி திடலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியது:
"செயல்படாத காங்கிரஸ் அரசின் பட்டியலில் முந்தைய புதுச்சேரி அரசுக்கு தனி இடம் உண்டு. கல்வி, மருத்துவ இடங்களை நிரப்புவது, எஸ்.சி.-எஸ்.டி. நலன் என எந்தத் துறை எடுத்தாலும் அதில் கொள்ளை மட்டும்தான் இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் புதுவை காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளது.
முன்னாள் முதல்வரின் குடும்பத்தினருக்கு நேரடித் தொடர்புடைய ஊழல்கள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிப்படையாக பேசுகின்றனர்.
அரசியலில் எனக்கு நீண்ட அனுபவம் உள்ளது. எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துள்ளேன். ஆனால், புதுச்சேரி தேர்தல் தனித்துவமானது. காரணம், ஆட்சியில் இருக்கும் முதல்வருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பல ஆண்டு விஸ்வாசம், தலைவரின் செருப்பை எடுத்துச் செல்வது, தலைவரைக் கவருவதற்காக தவறாக மொழிபெயர்ப்பது என அனைத்தையும் செய்தும், சீட் கொடுக்கப்படவில்லை. அவருடைய அரசு எத்தகைய பேரழிவு என்பதையே இது தெளிவாக வெளிப்படுத்துகிறது."
இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளான என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக பொதுச்செயலாளர் செல்வம், பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர்கள் ஓம்சக்தி சேகர், அன்பழகன் மற்றும் 30 தொகுதி வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.