புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய அரசின் இலவச அரிசி, தவிா்க்க இயலாத காரணங்களால் செவ்வாய்க்கிழமை (மே 18) முதல் வழங்கப்படவுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்- நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் கங்காபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் மத்திய அரசு உத்தரவிட்டதன் பேரில், புதுச்சேரி மாநில அனைத்துப் பகுதிகளுக்குள்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு (சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு) மே, ஜூன் மாத காலங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 2 மாத காலத்துக்கு 10 கிலோ இலவச அரிசி திங்கள்கிழமை (17-ஆம் தேதி) முதல் வழங்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தவிா்க்க இயலாத காரணங்களால், இலவச அரிசி செவ்வாய் (மே18) முதல் கீழ்க்காணும் முறைப்படி வழங்கப்படும். ஏற்கெனவே அறிவித்த விநியோக மையங்களில் இலவச அரிசி காலை 9 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தொகுதிகளில் உள்ள அனைத்து சிவப்பு அட்டைதாரா்களுக்கும், அந்தப் பகுதி அங்கன்வாடி ஊழியா்கள் வீடு, வீடாக வந்து டோக்கன் வழங்குவா்.
அதில் குறிப்பிட்ட தேதி, நேரப்படி மட்டுமே குறிப்பிட்ட அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும். பயனாளிகள் குறிப்பிட்ட தேதி, நேரப்படி டோக்கனுடன் வந்து தவறாமல் இலவச அரிசியை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், அரிசி விநியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், மையத்தில் சமூக இடைவெளியையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.