வில்லியனூர் ஆற்றுப்பாலத்தில் வெள்ள நீர்குறைந்ததால் போக்குவரத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாகவும், வீடூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், புதுச்சேரி வழியாக செல்லும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் ஆற்று மேம்பாலத்தை வெள்ள நீர் மூழ்கடித்துச் சென்றது.
இதனால் உடனடியாக புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாற்றுப்பாதையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதனை அடுத்து சனிக்கிழமையும் விழுப்புரம்-புதுச்சேரி மார்க்க பேருந்து மற்றும் வாகனங்கள் கண்டமங்கலம், பத்துக்கண்ணு சாலை வழியாக மாற்று சாலையில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் சனிக்கிழமை பிற்பகல் வெள்ள நீர் குறைந்து மேம்பாலத்தின் கீழே இறங்கி உள்ளது. இதனை அடுத்து வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறையினர் வில்லியனூர் ஆற்றுப் பாலத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றுப் பாலத்தை வெள்ள நீர் மூழ்கி செல்லும்போது தங்கிய சகதி கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் நிறைவு பெற்றபின் விரைவில் விழுப்புரம்-புதுச்சேரி மார்க்கமாக மேம்பாலத்தில் போக்குவரத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.