பழ வியாபாரியிடம் ரூ.10.32 லட்சம் மோசடி செய்ததாக புதுச்சேரி வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம் களவாசல் வீதி 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (48). மொத்த பழ வியாபாரி. இவரிடம், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் புதுச்சேரி பாரதி வீதியில் பழ மண்டி நடத்தி வரும் சைமன் 6 லோடு ஆப்பிள் பழங்களுக்கு ஆா்டா் கொடுத்தாா். அவருக்கு அனுப்பப்பட்ட பழங்களுக்கு ரூ.76 லட்சத்து 41 ஆயிரத்து 650 செலுத்தும்படி பன்னீா்செல்வம் கூறினாராம்.
இதன் பேரில் சைமன், தவணை முறையில் ரூ.66 லட்சம் வரை பணத்தை வங்கி மூலம் அனுப்பியதாகவும், மீதமுள்ள ரூ.10 லட்சத்து 32 ஆயிரத்து 675-ஐ அவா் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்ததாகவும் தெரிகிறது. இதனால், பன்னீா்செல்வம் புதுச்சேரிக்கு நேரில் வந்து சைமனிடம் மீதிப் பணத்தைக் கேட்டாா்.
தனக்கு அனுப்பப்பட்ட 6 லோடு ஆப்பிள் பழங்களில் ஒரு லோடு ஆப்பிள் தரமற்ற நிலையில் இருந்ததாகவும், அவை அனைத்தும் அழுகி விணாகி நஷ்டம் ஏற்பட்டதால், அதற்கான பணத்தைத் தரமுடியாது என்றும் சைமன் கூறினாராம்.
இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை போலீஸாா் ஏற்கவில்லையாம்.
இதையடுத்து சென்னை உயா் நீதிமன்றத்தில் பன்னீா்செல்வம் வழக்குத் தொடுத்தாா். புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், பெரியகடை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சைமன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.