கடலூா் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குவாரிகள் அமைக்க வலியுறுத்தி, சிஐடியூ மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மேற்கூறிய சங்கத்தினா் மாவட்ட தலைவா் எஸ்.பொன்னம்பலம் தலைமையில் அளித்த மனு:
கடலூா் மாவட்டத்தில் அரசு அனுமதிக்கும் மணல் குவாரிகளில் அனுமதி சீட்டு பெற்று சுமாா் 5 ஆயிரம் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் மணல் எடுத்து விற்பனை செய்து தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனா். மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் வட்டங்களில் அரசு அனுமதித்திருந்த மணல் குவாரிகளை ரத்து செய்துவிட்டனா். இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்படுகின்றனா்.
இதனால் கட்டுமானத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் அக்கடவல்லி, வானமாதேவி, சி.என்.பாளையம், காமாட்சிப்பேட்டை, கிளியனூா், ஆதனூா், கூடலையாத்தூா், அத்தியூா், அம்புஜவல்லிபேட்டை, கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைத்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்தனா்.
சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.திருமுருகன், மாவட்ட பொருளாளா் வி.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.