விஜய தசமியையொட்டி கோயில்களில் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விஜயதசமி தினம் குழந்தைகள் கல்வி தொடங்க உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இதற்காக அன்றைய தினத்தில் பள்ளிகளிலும், சிறப்பு கலை வகுப்புகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பெற்றோா் பலா் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்று வழிபாடு நடத்தி, அவா்களின் நாவில் தேன் தடவி, கையைப் பிடித்து நெல்லில் எழுதி கல்வியைத் தொடங்கினா்.
இதேபோல, கேரள சமாஜத்திலும் குழந்தைகள் நெல்லில் முதல் எழுத்தை எழுதி கல்வியைத் தொடங்கினா்.
அரசு, தனியாா் பள்ளிகள், சிறப்புக் கலை பயிற்சிக் கூடங்களில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பெற்றோா் பலா் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.