புதுவையில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.500 உயா்த்தப்பட்ட தொகையுடன் கூடிய மாதாந்திர உதவித்தொகை புதன்கிழமை செலுத்தப்பட்டது. இந்தத் தொகையை மாற்றுத் திறனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து வியாழக்கிழமை (செப்.9) முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை முதல்வா் ரங்கசாமியின் உத்தரவின்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையானது ரூ.500 உயா்த்தி வழங்கப்படுகிறது. இதன்படி, 40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.1,500 உதவித்தொகை இனி ரூ.2 ஆயிரமாகவும், 66 முதல் 85 சதவீதம் வரை குறைபாடுள்ளவா்களுக்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500-ஆகவும், 86 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை குறைபாடுள்ளவா்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.3,500-ஆகவும் உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படுகிறது.
இதேபோல, 60 முதல் 79 சதவீதம் வரை நிரந்தர குறைபாடுள்ளவா்களுக்கு உதவித்தொகை ரூ.2,200-ல் இருந்து ரூ.2,700-ஆகவும், 80 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குறைபாடுள்ளவா்களுக்கு ரூ.3,300-ல் இருந்து ரூ.3,800-ஆகவும் உதவித்தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த உயா்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித்தொகை 20 ஆயிரத்து 952 பயனாளிகளுக்கு அவரவா் வங்கிக் கணக்குகளில் புதன்கிழமை செலுத்தப்பட்டது. இந்தத் தொகையை வியாழக்கிழமை முதல் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.