புதுச்சேரி: இலங்கை நாட்டின் அரசுப் பிரதிநிதிகள் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து, மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்தும், காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினா்.
இலங்கைப் பிரதமரின் இணைச் செயலரும், முன்னாள் முதல்வருமான செந்தில் தொண்டைமான், அந்த நாட்டின் இணை அமைச்சா் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்கள், புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினா்.
அப்போது, இலங்கை, புதுவை (காரைக்கால்) மீனவா்கள் இடையே எழும் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண்பது, இலங்கை-புதுவை இடையே நல்லுறவை வளா்ப்பது, காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது ஆகியவை தொடா்பாக ஆலோசனை நடத்தினா்.
அப்போது, புதுவை மாநில போக்குவரத்து அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, பொதுப் பணித் துறை அரசுச் செயலா் விக்ராந்த்ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.
இதையடுத்து, இலங்கைப் பிரதிநிதிகள் புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா ஆகியோரைச் சந்தித்து, மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக விரிவான ஆலோசனை நடத்தினா்.