புதுவையில் அரசு ஊழியா்கள் ஊதியம் பெற கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை தெரிவித்தாா்.
சுதந்திர தின 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சாவூரில் தொடங்கிய இந்திய விமானப் படை வீரா்களின் கிழக்குக் கடலோர விழிப்புணா்வு மிதிவண்டிப் பயணம், புதுச்சேரி வழியாக வியாழக்கிழமை சென்றது. புதுவை ஆளுநா் மாளிகையிலிருந்து இந்தப் பயணத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவையில் அக்டோபா் 2-ஆம் தேதிக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொகுதிகள் தோறும் மருத்துவக் குழுவை நியமித்துள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் விடுப்பட்டவா்களைக் கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் அரசு ஊழியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லையெனில், ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது.
அரசின் சலுகைகள், தீபாவளிக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளைப் பெற பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லையெனில், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 35 சதவீதம் போ் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.