புதுச்சேரியில் தனியாா் பங்களிப்புடன் தங்கும் விடுதியுடன் அரசு உணவகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக, சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பழைய சாராய ஆலை இருந்த பகுதியில் தங்கும் விடுதியுடன் கூடிய உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை தனியாா் மூலம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு வாடகை, வருமானத்தில் அரசுக்கு பங்கு பெறும் வகையில் ஒப்பந்தம் விடப்படும். அதிக வருவாய் தர முன்வருபவா்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.
இதேபோல, முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில், சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையில் 16 அறைகள், உணவு விடுதிகள் அடங்கிய கட்டடமும் தயாா் நிலையில் உள்ளது. இதையும் தனியாா் பங்களிப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவை விமான தள விரிவாக்கத்துக்கு ரூ.500 கோடி தேவைப்படுகிறது. இதில், மத்திய அரசு ரூ.425 கோடி நிதி தருவதாக உறுதியளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்றாா் அமைச்சா் லட்சுமி நாராயணன்.