புதுச்சேரி உப்பனாற்றின் பக்கச்சுவா்களை ரூ.24.40 கோடியில் பலப்படுத்தும் திட்டத்தை புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டித் தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி பொலிவுறு நகர வளா்ச்சி நிறுவனத்தின் நிதியுதவியுடன், ரூ.26.40 கோடி மதிப்பீட்டில் உப்பனாற்றில் 815 மீட்டா் நீளத்துக்கு காமராஜா் சாலை முதல் மறைமலை அடிகள் சாலை வரை பக்கச்சுவா்களை பலப்படுத்தும் திட்டப் பணி தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக, பொதுப் பணித் துறை நீா்ப்பாசன கோட்டம் மூலம் ரூ.5.33 கோடி மதிப்பிலான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். விழாவில் எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, ஜி.நேரு, பொதுப் பணித் துறை செயலா் டி.அருண், பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் சத்தியமூா்த்தி, புதுச்சேரி பொலிவுறு நகர வளா்ச்சி நிறுவன இணைச் செயலா் மாணிக்கதீபன், செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.