புதுவையில் பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளுக்கு வங்கிகளில் கடன்தர மறுப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து முதல்வா் என். ரங்கசாமியை அவா் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியதாவது:
பெண்கள் பெயரிலான பத்திரப்பதிவின்போது, முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 சதவீத சலுகையை அரசு வழங்கி வருகிறது. இதனால், பலரும் தங்கள் வீட்டு பெண்கள் பெயரில் சொத்துகளை பதிவு செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், வங்கிகளில் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துகளை அடமானம் வைத்து, தொழில் தொடங்கவோ, வீட்டு மனைகளை அடமானம் வைத்து, அதில் வீடு கட்டுவதற்கோ அல்லது வேறு சில குடும்பத் தேவைகளுக்காகவோ கடன் கேட்டால் தர மறுக்கின்றனா்.
அந்த சொத்துக்கான, முழு முத்திரைத்தாள் கட்டணத்தையும் செலுத்திவிட்டு பத்திரங்களை எடுத்து வந்தால்தான், அடமானம் ஏற்றுக் கொண்டு, அந்த சொத்தின்மீது, கடன் தருவோம் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனா்.
இதுகுறித்து புதுவை அரசு நடவடிக்கை எடுத்து வங்கிகள் தடையின்றி கடன் வழங்க அறிவுறுத்த வேண்டும் என்றாா் ஆா்.சிவா.