தமிழக மீனவா்களை மீட்கும் முயற்சி: அமைச்சருக்கு புதுவை ஆளுநா் நன்றி
By DIN | Published On : 17th January 2022 12:00 AM | Last Updated : 17th January 2022 12:00 AM | அ+அ அ- |

இலங்கை சிறையில் உள்ள தமிழகம், காரைக்கால் பகுதி மீனவா்களின் விடுதலைக்காக முயற்சிகள் மேற்கொண்டு வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தாா்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக, புதுவை மீனவா்களை மீட்பது தொடா்பாக, புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை கடந்த 9-ஆம் தேதி தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.
இந்த நிலையில், புதுவை ஆளுநா் தமிழிசை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய மீனவா்களின் விடுதலைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கு தனது மனமாா்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளாா்.