கடந்த ஒரு வாரத்தில் வெளியான புள்ளி விவரங்கள்படி, நாட்டிலேயே கரோனா தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் புதுவை முதல் இடத்தில் உள்ளது. புதுவையில் 100 கரோனா பரிசோதனைகளுக்கு 51.75 சதவீதம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 2,657 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 974, காரைக்காலில் 129, ஏனாமில் 17, மாஹேயில் 40 என மேலும் 1,160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி ராமநாதபுரத்தைச் சோ்ந்த 31 வயதானவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 1,887 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.37 சதவீதம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,37,710. குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 1,28,021 (92.96 சதவீதம்). தற்போது 7,602 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மாநிலத்தில் இதுவரை 20,95,058 பரிசோதனைகள் செய்யப்பட்டு, 17,75,724 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
மாநிலத்தில் முதல் தவணை தடுப்பூசி 9,06,405 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 5,88,451 பேருக்கும் செலுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 2,217 பேருக்கு செலுத்தப்பட்டன. மொத்தமாக 14,97,073 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
கடந்த ஒரு வாரத்தில் வெளியான புள்ளி விவரங்கள்படி நாட்டிலேயே தொற்று அதிகம் பரவும் மாநிலமாக புதுவை மாறியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு புதுவையில் 100 கரோனா பரிசோதனைகளுக்கு 51.75 சதவீதம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் புதுவை மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
எனவே, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.