புதுச்சேரி: புதுவை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
புதுவை அரசின் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று 56 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, பட்டம் பெற்ற மாணவர்களைப் பாராட்டி, முதலிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர், இந்த கல்லூரியில் மேலும் முதுகலை படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்வதற்கு தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இவ்விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், சாய் ஜெய் சரவணன்குமார், எம்எல்ஏ அணிபால் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் இயக்குநர் ராகவேந்திரா பட் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் செழியன் நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.